புதுச்சேரி: புதுச்சேரி, உப்பளம் சாலையில் உள்ள தமிழக அரசு பணிமனையில் பஸ்களை பழுதுநீக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மே 17ம்தேதிக்கு பின் குறைந்த பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசு அறிவித்த தேசிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது. இதனால் விமானம், பஸ், ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்ட தேவைக்காக விமானம், ரயில் சேவை மட்டும் தொடங்கப்பட்டுள்ளது. மே 17ம்தேதிக்கு பின் பஸ் போக்குவரத்ைத அனைத்து மாநிலங்களிலும் தொடங்குவது தொடர்பாக மத்திய அரசு சில வரைமுறைகளை வகுத்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களை புனரமைப்பு பணிகளை முடித்து தயார் நிலையில் வைத்திருக்க பணிமனை நிர்வாகங்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி, உப்பளத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 51 பஸ்களையும் பழுதுநீக்கி, துப்புரவு செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிளை மேலாளர் தேன்மொழி மேற்பார்வையில் உதவி பொறியாளர்கள், 2 போர்மேன்கள் தலைமையில் டெக்னீசியன்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்களின் இன்ஜீன்கள் பழுதுபார்க்கப்பட்டு டயர்களில் காற்று அடிக்கப்பட்டு வருகின்றன. ஆயில் சர்வீஸ் பார்க்கப்பட்டுள்ளன. மேலும் இருக்கைகளை சுத்திப்படுத்தி கிருமிநாசினிகளும் தெளிக்கப்படுகிறது. தினமும் அங்கு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மே 17ம்தேதிக்கு பிறகு பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்களை பணிமனை நிர்வாகம் செய்துவருவதாகதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதுபற்றி பணிமனை கிளை பொறுப்பாளர்களிடம் கேட்டபோது, மே 18ம்தேதியில் இருந்து பஸ்களை இயக்க நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். ஒரு பஸ்சில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்காக பேருந்து கட்டணத்திலும் ரூ.5 வரை கூடுதலாக வாங்கப்படும் என்றனர். தமிழக, புதுச்சேரி அரசு பஸ்கள் இயங்க தொடங்கியதும் தனியார் பஸ்கள், டெம்போக்களும் புதுச்சேரியில் அடுத்தடுத்து ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.