பூந்தமல்லி: மதுரவாயல், ஜானகி நகர், முதல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (32), கார் டிரைவர். இவரது மனைவி ரஞ்சிதா (என்ற) எஸ்தர் (27), இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மகாராஷ்டிரா செல்வதற்கு சவாரி ஒன்று வந்திருப்பதாகவும் சவாரி சென்று வந்தால் வருமானம் கிடைக்கும் என மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் தற்போது வெளியூர் செல்ல வேண்டாம். வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக்கொள்ளுங்கள் என்று மனைவி கூறியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் ஆத்திரமடைந்த எஸ்தர், வீட்டில் இருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு தாமஸ் ஓடி வந்து தீயை அனைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். மனைவி இறந்த செய்தி கேட்டவுடன் துக்கம் தாங்க முடியாமல் தாமஸ் வீட்டின் உள்புறம் கதவை மூடி கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதையடுத்து அவரது உறவினர்கள் கதவை உடைத்து தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த தாமஸை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.