சென்னை: மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்களின் குடும்பங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் மூன்று லட்சம் புகைப்படக் கலைஞர்கள் இருந்தும் நலவாரியத்தில் அவர்கள் உறுப்பினராக இல்லை. அவர்களை நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்க முன்பு கோரிக்கை வைத்தும் அரசு ஆர்வம் காட்டவில்லை. நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத பல தொழில்களை சேர்ந்த அனைவருக்குமே தமிழக அரசு உரிய சலுகைகளை வழங்கி, அவர்களுடைய தொழில்கள் நலிவடையாமல் இருக்க தொழில் தொடங்க கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.
இந்த சூழ்நிலையில் நலவாரிய உறுப்பினர்களுக்கு கிடைத்த அரசின் உதவியும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. 144 ஊரடங்கு உத்தரவால் கடந்த 49 நாட்களுக்கும் மேலாக திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள், ஆன்மிக வழிபாடுகள், கோயில் கும்பாபிஷேகங்கள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறாததால் வருமானம் இல்லாமல் அவர்களின் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு கூட இலவச எண்ணில் பேசினால் உடனடியாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும் என்று தெரிவித்தது. அதேபோல் நலவாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத இந்த புகைப்பட கலைஞர்களுக்கும் நிவாரணத் தொகையை தமிழக அரசு அளித்திருக்கலாம். எனவே இவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு உதவித்தொகை வழங்கிடவும், நலவாரியத்தில் உறுப்பினர்களாக்கவும், தொழிலை தொடங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.