சென்னை: பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி சலுகைகள் அறிவிப்பு, ஏழை மக்களுக்கு பலன் தருமா என கேள்வி எழுப்பியுள்ளார் கமல்ஹாசன்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பொருளாதாரத்தை மேம்படுத்த 20 லட்சம் கோடியில் சலுகைகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், நேற்று காலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பதிவில் கூறுகையில், ‘உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதேநேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கும் இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.