×

மதுரையில் வைகையாற்றின் குறுக்கே ரூ.23 கோடியில் பாலம் கட்டும் பணி துவக்கம்

மதுரை: மதுரையில் வைகையாற்றின் குறுக்கே குருவிக்காரன் சாலையில் ரூ.23.17 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணி இன்று துவங்க உள்ளது. இதையொட்டி பழைய பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் வைகையாற்றின் கரையில் கணேஷ் தியேட்டர் பஸ் ஸ்டாப் - அரவிந்த் கண் மருத்துவமனை இடையே குருவிக்காரன் சாலை தரைமட்ட பாலம் உள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் கட்டப்பட்டது. உரிய பராமரிப்பில்லாததால் இந்த பாலத்தின் அடித்தளம் மிகவும் பலமிழந்துள்ளது. மேலும் ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வந்தால், இந்த  தரைமட்ட பாலம் மூழ்கி விடும்.

இதனால் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றும் நிலை ஏற்பட்டு வந்தது. எனவே தரைமட்ட பாலத்தை அகற்றி விட்டு, புதிய உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தரைப்பாலத்தை அகற்றி விட்டு, புதிய உயர்மட்ட பாலம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. நகர் மற்றும் ஊரகத் திட்ட துறையின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் ரூ.23.17 கோடி மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணி, இன்று துவங்க உள்ளது. இந்த பாலம் 200 மீ நீளம், 17.50 மீ அகலம் மற்றும் இருபுறமும் 1.50 மீ. நடைமேடையுடன் அமைக்கப்பட உள்ளது.

கட்டுமான பணி துவங்க உள்ளதால், இன்று முதல் பழைய பாலத்தில் இன்று முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்காக பாலத்தின் மேற்கு பக்கம் தற்காலிகமாக அணுகு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : bridge ,Madurai ,Vaigaiyaru , Madurai, Vaigai, bridge construction work
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!