×

தொழிலாளர்கள் சட்டத்தில் ஒர்க் ஃப்ரம் ஹோம்-ஐ புதிய அம்சமாக கொண்டு வர தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கு காலத்தில், ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறையில் நல்ல பலன் கிடைத்துள்ளதால், வீட்டில் இருந்தே வேலை செய்வதை தொழிலாளர் சட்டத்தின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.தொழிலாளர்கள் சட்டத்தில் ஒர்க் ஃப்ரம் ஹோம் (WORK FROM HOME) என்பதை, புதிய அம்சமாக கொண்டு வர வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இது குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் அண்மையில், தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

அதில், தற்போது, சுமார் 90 சதவிதத்திற்கும் அதிகமான தகவல் தொழில்நுட்பத்துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்து வரும் நிலையில், இதனை தொழிலாளர் சட்டத்தின் ஒரு அங்கமாக மாற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில்,ஒர்க் ஃப்ரம் ஹோம் குறித்து தொழிலாளர் சட்டத்தில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து நாஸ்காம் அமைப்பு அடுத்த வாரத்தில் அறிக்கை ஒன்றை மத்திய அரசிடம் சமர்பிக்க உள்ளது.

அதில், வேலை நேரம் மற்றும் ஷிப்ட் நேரங்களை மாற்றி அமைக்க பரிந்துரை செய்யப்பட உள்ளது. வீட்டில் இருந்தே வேலை செய்வதால், ஒருவர் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு உருவாகும். அதனால், வருங்கால வைப்பு நிதிக்கு பதிலாக, அவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தை வழங்கலாம்.ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்வதற்கு, நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தரும் போது ஏற்படும் செலவை, நிறுவனத்தின் செலவு கணக்கில் எழுத அனுமதிக்க வேண்டும். வீடுகளில், இணைய சேவை வழங்கும் திறனை தற்போது இருப்பதை விட பன்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பன போன்ற அம்சங்க்ளை தகவல் தொழில்நுட்ப துறையினர் கோரியுள்ளனர்.

இந்த கோரிக்கைகள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில் , 2025ம் ஆண்டுக்குள் TCS நிறுவனம், தனது ஊழியர்களில் 75 சதவிதத்தினரை WORK FROM HOMEல் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 25 சதவித ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய வைக்கலாம் என்று டெக் மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் 10 ஆயிரம் பேர் ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை பார்ப்பது குறைந்து, ஒரு சிறிய நகரத்தில் 500 பேர் அலுவலகத்திற்கு வந்தால் போதும் என்ற நிலை உருவாகும் என தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் ஒர்க் ஃப்ரம் ஹோம் மூலமாக HCL நிறுவனம் நல்ல பலன் அடைந்திருப்பதால், சுழற்சி முறையில் 50 சதவித ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளது.

Tags : IT companies ,companies , Employees, non-profits, companies, work from home
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...