சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொழிற்சாலைகள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து அனைத்து தொழிற்சாலைகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலம் முழுவதும் (கட்டுப்பாட்டு மண்டலங் களைத் தவிர) அமைந்துள்ள சிலவகை தொழில்களை இயக்க அரசு அனுமதித்துள்ளது. உற்பத்தி நடவடிக்கைகளை துவங்குவதற்கு முன்பு, அனைத்து மாசுக்காட்டுப்பாட்டு உபகரணங்களையும் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அதன் இயந்திரங்கள் உள்ளிட்ட கழிவுப்பொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் நல்ல செயல்பாட்டு நிலையில் வைக்க வேண்டும்.
தேவையான உயர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி ஆலை உயர் அதிகாரிகளின் முன்னிலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விஷ வாயுக்களின் கசிவை தவிர்க்க வேண்டும். மேலும் எஸ்டிபி மற்றும் ஈடிபி தொட்டிகளை இயந்திரங்களின் மூலமே சுத்தம் செய்ய வேண்டும். தொட்டி துப்புரவு நடவடிக்கைகள் மற்றும் பிற ஆபத்து தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.