- ஃபிஃபா யு -17 மகளிர் உலகக் கோப்பை புதிய அட்டவணை
- ஃபிஃபா யு -17 மகளிர் உலகக் கோப்பை புதிய அட்டவணை அறிவிப்பு
புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற உள்ள பிபா யு-17 மகளிர் உலக கோப்பை தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய அட்டவணை விவரத்தை சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா நேற்று வெளியிட்டது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி தொடங்கும் இந்த தொடர் மார்ச் 7ம் தேதி வரை நடைபெறும் என பிபா அறிவித்துள்ளது. போட்டியை நடத்தும் இந்தியாவுடன் சேர்த்து மொத்தம் 16 அணிகள் களமிறங்க உள்ளன. புவனேஸ்வர், கொல்கத்தா, கவுகாத்தி, அகமதாபாத், நவி மும்பை என 5 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், ஸ்டேடிய ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரின் உடல்நலம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொண்டு இந்த புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.