காபூல்: ஆப்கானிஸ்தானில் மகப்பேறு மருத்துவமனையில் நுழைந்து தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 2 பச்சிளம் குழந்தைகள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் டாஷ்டி பார்சியில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்குள் நேற்று திடீரென நுழைந்த 3 தீவிரவாதிகள், அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் மீது கண்மூடித்தனமாக இரக்கமற்ற வகையில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பிறந்து சில நாட்களே ஆன 2 பச்சிளம் குழந்தைகளும், அவற்றின் தாய், செவிலியர்கள் உள்பட 14 பேர் பலியாகினர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது குறித்து இந்நாட்டின் உள்துறை செய்தி தொடர்பாளர் தாரிக் ஆரியன் கூறுகையில், ``நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதல் மனிதாபிமானமற்றது, போர் குற்றமாகும்,’’ என்றார். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆனால், தாங்கள் காரணமல்ல என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், நாங்கர்கார் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஊர்வலத்தின் போது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். 55 பேர் காயமடைந்தனர்