டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக 3-வது முறையாக நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். கொரோனா பரவலை தடுக்க நீட்டிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 17-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று அனைத்து மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை நடத்தினார்.
முதல் ஊரடங்கு உத்தரவின்போது தேவைப்பட்ட கட்டுப்பாடுகள், இரண்டாவது முறை தேவையில்லை என்று உறுதியாக நம்பினேன். அதேபோலத்தான் மூன்றாவது முறை ஊரடங்கின்போது போடப்பட்ட கட்டுப்பாடுகள் நான்காவது முறை தேவைப்படாது என்று நம்புகிறேன். என்று முதல்வர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மக்களுக்கு 3-வது முறையாக உரையாற்றி வருகிறார். அவர் கூறியதாவது;
* கொரோனா தொற்றுக்கு எதிராக 4 மாதங்களாக போராடி வருகிறோம்.
* உலகம் முழுவதும் 3 லட்சம் பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளது வருத்தம் அளிக்கிறது.
* கொரோனா வைரஸ் உலக நாடுகளை மண்டியிட வைத்துள்ளது.
* இந்திய ஒரு சுயசார்புள்ள நாடு என்பதை நிரூபிக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்று விடக்கூடாது.
* கொரோனா வைரஸுக்கு எதிரான போரை தொடர வேண்டியுள்ளது. நம்மை நாமே தற்காத்துக்கொண்டு கொரோனாவிற்கு எதிராக போராட வேண்டியுள்ளது.
* மனித இனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு.
* கொரோனா வைரஸ் முன்னதாக நம் மனித இனம் தோற்றுப் போய்விட்டது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
* கொரோனா பாதிப்பால் இந்தியா ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. தற்போதைய நெருக்கடி இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.
* உலகம் ஒரே குடும்பம் என்பதை இந்திய கலாச்சாரம் வலியுறுத்தி வருகிறது.
* கொரோனா பாதிப்பின் தொடக்கத்தில் தடுப்பு உபகரணங்கள் ஒன்று கூட இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை.
* மிக குறைந்த அளவிலான என் 95 முக கவசங்களே இந்தியாவில் இருந்தன. தற்போது 2 லட்சம் கொரோனா தடுப்பு உபகரணங்கள், 2 லட்சம் என் 95 முக கவசங்கள் நாள்தோறும் தயாரிக்கப்படுகின்றன.
* யோகாசனம் இந்தியா உலகிற்கு அளித்த பரிசு ஆகும்.
* கொரோனா விவகாரத்தில் உலகிற்கே இந்தியா ஒரு நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது.
* 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை பிரதமர் மோடி அறிவிக்கிறார். இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார். சிறு,குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும்.
* கொரோனாவிற்கு பின்னர் இந்தியாவை சிறந்த நாடாக உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
* துணிச்சலான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தயாராகிறது.
* உள்நாட்டு சந்தையின் முக்கியத்துவத்தை கொரோனா பிரச்னை உணர்த்தியுள்ளது.
* அனைத்து இந்தியர்களும் உள்நாட்டு உற்பத்தி பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* கைத்தறியையும் நாம் இந்த சமயத்தில் பிரபலபடுத்தவேண்டும். ஏற்றுமதியை வேகப்படுத்தவேண்டிய நேரமிது.
* கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான 4-ம் கட்ட ஊரடங்கு மாறுபட்டதாக இருக்கும்.
* 4-ம் கட்ட ஊரடங்கு குறித்த விவரங்கள் மே 18-ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும்.