×

கொரோனா நோயை வேகமாக கண்டறிய அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனம் : 5.48 கோடி மதிப்பு

* முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய நல வாழ்வு குழுமத்தின் சார்பில் ₹5 கோடியே 48 லட்சம் செலவில், நெஞ்சக தொற்று நோய் மற்றும் கோவிட்-19 னால் ஏற்படும் நெஞ்சக தொற்று நோய்களை துரிதமாக கண்டறிய நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட 14 வாகனங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கும் அடையாளமாக 5 வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், பரிசோதனை முடிவை மருத்துவர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும் இயலும். இன்னும் பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள், தொழிற் சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் இந்த வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது.இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Tags : Corona, Sophisticated X-ray Equipment, 14 Vehicle
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...