×

கோயம்பேடு மார்க்கெட் மூடல் திருமழிசை மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை துவக்கம்: பொதுமக்களுக்கு அனுமதியில்லை

சென்னை: கொரோனா தொற்றால் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்ட நிலையில், திருமழிசை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் நேற்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது. சென்னை கோயம்பேடு சந்தையில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்ததால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தது. இதை தடுக்கும் வகையில் மார்க்கெட் மூடப்பட்டது. இதனால், சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணியும் துரிதமாக நடந்தது. கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதின் விளைவாக பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்கனவே மொத்த வியாபாரிகள் கையில் இருந்த சரக்குகளே விற்பனை ஆனது. இதனால் காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. அதேவேளையில் கிடைக்கும் காய்கறியும் கிடுகிடுவென விலை உயர்ந்து மக்களை மலைக்க செய்தது.

கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயர்ந்து விற்கப்பட்ட நிலையில், சென்னையை அடுத்த திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நேற்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது. ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட லாரிகளில் 6 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளன. இந்த சந்தையில் 4 பிரிவுகளாக கடைகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, ஏ பிரிவில் 58 கடைகள், பி பிரிவில் 31 கடைகள், சி பிரிவில் 60 கடைகள், டி பிரிவில் 51 கடைகள் என விற்பனை நடந்து வருகிறது. கடந்த வார இறுதியில், விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் நேற்று விலை குறைந்துள்ளது. அடைப்புக்குறிக்குள் (கடந்த வார விலை நிலவரம்):

இதன்படி, தக்காளி 15 (35), உருளை கிழங்கு 25 (65), பெரிய வெங்காயம் 14 (40), கேரட் 25 (60), 40 முதல் 60 வரை விற்கப்பட்ட கத்தரிக்காய் 25க்கு விற்கப்படுகிறது. 60 முதல் 65 வரை விற்பனையான வெண்டைக்காய் 25க்கும் பீன்ஸ் 50, முள்ளங்கி 25, அவரைக்காய் 30, புடலங்காய் 20க்கும் விற்பனையாகி வருகிறது. எனினும், இந்த சந்தையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மொத்த வியாபாரிகளே வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

Tags : Closing ,public ,Coimbatore Market The CMBT , Koyambedu market, tirumalicai market, selling vegetables
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...