சென்னை: துரைப்பாக்கம் எழில் நகரில் வாடகைக்கு குடியிருந்தவர் நிஷா பர்வின் (33), அவரது கணவர் அருள்தாஸ் (35). இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. நிஷா தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு வேலை நிமித்தமாக பெங்களூரு சென்ற அருள்தாஸ், ஊரடங்கு காரணமாக திரும்பி வர முடியாமல் அங்கேயே தவித்து வருகிறார்.
இதனால், கடந்த மூன்று மாதங்களாக வாடகை தர முடியாத நிலை ஏற்பட்டது. செல்போனிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனிடையே, வாடகை தராததால் நிஷா மற்றும் குழந்தையை வீட்டின் உரிமையாளர் கடந்த 10 நாட்களுக்கு முன் வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து காலி செய்துள்ளார். இதனால், கடந்த 10 நாட்களாக எங்கு செல்வது என்று தெரியாமல் குழந்தையோடு, அடுத்த வேளை உணவிற்கும், குழந்தையின் பாலுக்கும் செய்தவறியாது சாலையிலேயே சுற்றித்திரிந்து வருகிறார்.