×

மருத்துவம் உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வதற்கு 1 மணிநேரத்தில் அனுமதி: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: இறப்பு, மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கோரும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, 1 மணி நேரத்திற்குள் அனுமதி சீட்டு வழங்கி வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வெளியூர் செல்பவர்களுக்கு மட்டும் மின்னணு முறையில் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக ஏற்படும் மரணங்கள் மற்றும் உடல் நலக் குறைவுகளுக்கு உடனடி அனுமதிச்சீட்டு வழங்கக் கோரி  ராம்குமார்  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், இதனால மக்கள்  பாதிக்கப்படுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நியாயமான காரணங்கள் உள்ள எல்லா விண்ணப்பங்களையும் உடனுக்குடன் பரீசலித்து அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்து அதிகாரி மேற்பார்வையில்  30 நபர்கள் இந்த பிரிவில் பணியாற்றி வருவதாகவும், கால் சென்டர்  செயல்படும் நேரம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை என்ற போதிலும், துக்க நிகழ்வுகள் மற்றும் மருத்துவ அவசர தேவைகள் என்றால் நேரத்தை பற்றி பொருட்படுத்தாமல் அதிகபட்சம் 1 மணி நேரத்திற்குள்  பயணிப்பதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஞாயிறு நிலவரப்படி திருமணம், துக்க நிகழ்வு, மருத்துவ அவசரம் உள்ளிட்ட தேவைகளுக்காக அளிக்கப்பட்ட 3 லட்சத்து 61 ஆயிரத்து 433 விண்ணப்பங்களில், 3 லட்சத்து 48 ஆயிரத்து 210 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 13,222 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. அரசுத் தரப்பின்  விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Tags : town ,High Court , Corona, Curfew, Medical, Outdoor, High Court, Govt
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி