திருவனந்தபுரம்: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமலில் உள்ள லாக்-டவுன் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஆங்காங்கே சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். கேரளாவில் இருந்து இதுவரை 25க்கும் மேற்பட்ட ரயில்களில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், திருவனந்தபுரம் பேட்டையில் ஒரு வணிக வளாகம் கட்டும் பணியில் ஈடுபட்டுவரும் 700க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரி நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை பலன் அளிக்கவில்லை. அப்போது, தொழிலாளர்கள் திடீரென கற்களை எடுத்து போலீசார் மீது வீசினர். இதில் இன்ஸ்பெக்டர் உட்பட 3 போலீசார் காயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.