டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், பின்னர் 19 நாட்கள், அடுத்தது 14 நாட்கள் என 3 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 3-ம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிய உள்ளது. ஆனாலும், இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஒவ்வொரு முறையும் ஊரடங்கு முடிவதற்கு முன்பாக, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார். அந்தவகையில், 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என மோடி கோரியுள்ளார்.
மேலும், சிவப்பு மண்டலங்களில் கடும் நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர்களுக்கு மோடி அறிவுறுத்தியும் உள்ளார். கொரோனாவு எதிரான போராட்டத்தை அனைத்து இடங்களிலும் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனாவை கையாண்டு வருவதற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. கொரோனா விவகாரத்தில் மாநில அரசுகளின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. மீண்டெழும் பொருளாதாரத்தை உத்வேகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தனிமனித விலகல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.