டெல்லி: ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பிற மாநிலங்களில் தவிக்கும் பயணிகளை அழைத்துச் செல்லும் சிறப்பு ரயில்களில் மேலும் 500 பேர் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் பல மாநிலங்களில் பிற மாநில தொழிலாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்காக சிறப்பு ரயில்கள் மே 1-ந் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை மொத்தம் 428 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை சுமார் 5 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பயணிகள் ரயில் சேவையை படிப்படியாக தொடங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. நாளை முதல் பயணிகள் ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. முதற்கட்டமாக டெல்லியிலிருந்து சென்னை உட்பட 15 நகரங்களுக்கு ரயில் இயக்கப்பட உள்ளது.
தற்போது இயக்கப்டும் இந்த சிறப்பு ரயில்களில் 1200 பேர் மட்டுமே பயணிக்க முடியும். இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின் படி கூடுதலாக 500 பயணிகளை அழைத்துச் செல்ல ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. மேலும் பயணிகள் சென்றடையும் மாநிலத்தில் 3 ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களை அனைத்து மாநில அரசுகளும் அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.