×

தூத்துக்குடியில் அன்னையர் தினத்தில் மரியாதை மயங்கி விழுந்த மூதாட்டியை பரிவுடன் வீட்டில் சேர்த்த பெண் போலீசார்: பொதுமக்கள் பாராட்டு

தூத்துக்குடி: அன்னையர் தினமான நேற்று ரோட்டில் மயங்கி விழுந்த மூதாட்டியை பரிவுடன் அழைத்து சென்று வீட்டில் சேர்ந்த 2 பெண் போலீசாருக்கு பொதுமக்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையின் கிழக்கு வாசல் பகுதியில் வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென அவர் ரோட்டில் மயங்கி விழுந்தார். இதனை அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் போலீசார் உமாமகேஷ்வரி, அபிதா ஆகிய இருவரும் கண்டனர். உடனடியாக அவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர் மூதாட்டியிடம் அவரது வீட்டு முகவரியை கேட்டுள்ளனர். அவர் முனியசாமிபுரத்தில் இருப்பதாகவும், மருந்து வாங்க மருத்துவமனைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெண் போலீசார் இருவரும் மனிதாபிமானத்துடன் மூதாட்டியை தங்களது மொபட்டில் ஏற்றி சென்று பத்திரமாகவும் அதே நேரத்தில் சுகாதார முறைகளை கடைப்பிடித்தும் வீட்டிற்கு கொண்டு சென்றுவிட்டு வந்துள்ளனர்.
அன்னையர் தினமான நேற்று தூத்துக்குடியில் மூதாட்டியை தங்களது தாய் போன்று பரிவுடன் மீட்டு மொபட்டில் அழைத்து சென்ற பெண் போலீசார் இருவரையும் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி தங்களது வீடுகளின் முன்பிருந்தவாறே கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பலரும் பார்த்து பெண் போலீசாரை பாராட்டினர். இதையறிந்த போலீஸ் அதிகாரிகளும் அவர்களை பாராட்டினர்.



Tags : home ,Thoothukudi ,Mother's Day Mother's Day , Woman cops , Thoothukudi , Mother's Day
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...