×

முன்பகை காரணமாக விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு: அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த, அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ (15). இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டின் உள்ளே இருந்து தீப்புகை வந்தது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது உடலில் நெருப்புடன் ஜெயஸ்ரீ எரிந்து கொண்டிருந்தார். அவரை மீட்ட உறவினர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், தன்னை கட்டிப்போட்டு முருகன், கலியபெருமாள் ஆகிய இரண்டு பேரும் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக விழுப்புரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் அருண்குமாரிடம் ஜெயஸ்ரீ வாக்குமூலம் அளித்தார்.

அதன்பேரில் முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், எங்களுக்குள் ஏற்கெனவே முன்பகை இருந்து வந்தது. அவர்கள் என் மகனை தாக்கினர். அதனால் அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்துவிட்டு அதுகுறித்து புகார் கொடுக்க காவல்நிலையத்துக்கு சென்றேன். அந்த ஆத்திரத்தில் அவர்கள் யாரும் இல்லாத சமயத்தில் என் மகளை இவ்வாறு செய்துவிட்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கதறினர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK ,councilor , Two students, including , AIADMK councilor, arrested on gasoline ,fire
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...