புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வழக்கம்போல, ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் என்று மக்களவை சபாநாயகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்தாண்டு ஜூன் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று பரவி வரும் நிலையிலும், மழைக்கால கூட்டத் தொடர் வழக்கம்போல் தொடங்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். இது தொடர்பாக நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: மழைக்கால கூட்டத் தொடர் வழக்கம்போல் தொடங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனாலும் அந்நேர சூழ்நிலையை பொருத்து அது முடிவு செய்யப்பட உள்ளது.
ஜூன், ஜூலை மாதங்கள் வரை சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியமாகும். அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். பொது முடக்கத்தின்போது கட்சி பாகுபாடுகளை மறந்து மக்களுக்கு உதவிய எம்பி.க்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கிறேன். அரசுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவினாலேயே அனைத்து நடவடிக்கைகளும் சிரமமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இது தவிர, அனைத்து மாநில முதல்வர்களும் சூழ்நிலையை உணர்ந்து பிரச்னையை திறம்பட கையாளுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.