ஓசூர்: கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிப்போர், தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்லலாம் என கடந்த சில நாட்களுக்கு முன், மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பலரும் சொந்த மாநிலத்திற்கு சென்று வருகின்றனர். மேலும், திருமணம், மரணம் மற்றும் அத்தியாவசிய மருத்துவ தேவைகளுக்காக இ-பாஸ் பெற்று பிற மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்குள் நுழையும் அனைத்து சொகுசு கார்களையும், கொரோனா அச்சம் காரணமாக அம்மாநில போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வருகின்றனர்.
மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சோதனை சாவடி அமைத்து, தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து சொகுசு கார்களையும் திருப்பி அனுப்புகின்றனர். கர்நாடகாவை கடந்து குஜராத், மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு செல்வோர் மற்றும் அத்தியாவசிய பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டுமே கர்நாடகாவிற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான கார்களில் சென்ற பொதுமக்கள், மாநில எல்லையில் காத்து கிடக்கின்றனர்.
கர்நாடக மாநில அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கொரோனா பரவலை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை மீறி செல்பவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள்,’ என்றனர். மாநில எல்லைகளில் திருப்பி அனுப்பப்பட்டு வரும் சொகுசு கார்களில் சென்றவர்கள், எங்கு செல்வது என தெரியாமல் அங்கேயே தவித்து வருகின்றனர். இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.