குடியாத்தம்: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு இரண்டே நாளில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது.
இதனால் மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் கடும் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் ஒரு லிட்டர் சாராயம் ₹500 முதல் ₹700 வரை நேற்றுமுன்தினம் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே தற்போது ஆந்திர மாநிலத்தில் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இதில் தமிழக- ஆந்திர எல்லையான குடியாத்தம் அடுத்த சைனகுண்டா சோதனை சாவடி அருகே ஆந்திரா அரசுக்கு சொந்தமான மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது.
மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்த குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடிமகன்கள் நேற்று குடியாத்தம்- பலமனேர் சாலை வழியாக ஆந்திர மாநிலத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைகளுக்கு படையெடுத்தனர்.
அவர்களை ஆந்திர மாநில போலீசார் விரட்டி வருகின்றனர். மேலும், தமிழக சோதனை சாவடிகளில் பைக் சோதனைகள் கடுமையாக்கப்பட்டதால் கிராமப்புறம் மற்றும் வனப்பகுதி வழியாக மாற்று வழிகளில் குடிமகன்கள் மது வாங்கி வருகின்றனர்.