திருவனந்தபுரம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரளாவில் இன்று (10ம் தேதி) 7 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் உறுதி செய்யப்பட்ட திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் கடந்த 7ம் தேதி அபுதாபியில் இருந்து விமானத்தில் வந்தவர்கள் ஆவர். வயநாடு மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. வயநாடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் சென்னை கோயம்பேட்டுக்கு சென்று திரும்பியவர்கள் ஆவர். இன்று (நேற்று) 4 பேருக்கு நோய் குணமாகி உள்ளது. இதுவரை 489 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி உள்ளனர். தற்போது 20 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காசர்கோடு மாவட்டத்தில் தான் இதுவரை மிக அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் இருந்தனர். இந்த மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 178 நோயாளிகளும் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். இன்று (நேற்று) கொரோனா அறிகுறிகளுடன் 135 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.