சென்னை: அண்ணா சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் பணியாற்றிய ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் மற்றும் உணவு வாங்கி சென்றவர்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை மூன்று கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அப்போது அத்தியாவசிய கடைகளான மளிகை கடைகள், காய்கறிகடைகள், மருந்துக்கடைகள் போன்றவற்றுக்கு சில கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதேபோன்று ஓட்டல்கள், பேக்கரி கடைகளில் பார்சல்கள் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அண்ணாசாலையில் உள்ள பிரபல ஓட்டல், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்ததில் இருந்து செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த உணவகத்தில் வேலை செய்து வந்த ஊழியர் ஒருவருக்கு 2 நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல், இருமல் இருந்தது. இதையடுத்து அவர் சோதனை செய்து முடிவுக்காக காத்திருந்தார்.
நேற்று சோதனை முடிவு வந்தது. அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஓட்டல் மற்றும் அந்த பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நாட்கள் முதல் உணவகத்தில் ஏராளமானவர்கள் பார்சல்கள் வாங்கி சென்றுள்ளனர். அவர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.