×

வீட்டில் பெற்றோருடன் தூங்கிய குழந்தையை தூக்கிச்சென்று கொன்று தின்ற சிறுத்தை: கர்நாடகாவில் பயங்கரம்

ராம்நகரம்,  : வீட்டில் பெற்றோருடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை சிறுத்தை ஒன்று  தூக்கிச் சென்று கொன்று தின்ற  சம்பவம் நடந்துள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது கர்நாடகாவின் மாகடி தாலுகா, கதிரையனபாளையா கிராமத்தை சேர்ந்தவர்கள்  சந்திரப்பா-மங்களகவுரியம்மா தம்பதியர். நேற்று முன்தினம் மாலை பெய்த மழை  காரணமாக கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. புழுக்கம் அதிகமாக  இருந்ததால், கதவை திறந்து வைத்து தனது மூன்று வயது மகன் ேஹமந்துடன் தூங்கி  கொண்டிருந்தனர். திடீரென எழுந்து பார்த்த போது குழந்தை காணாமல் போனது கண்டு  அதிர்ச்சியடைந்த பெற்றோர் வெளியில் சென்று பார்த்தனர். அப்போது நிலத்தில்  மழை ஈரத்தில் சிறுத்தை கால் சுவடு இருப்பதை பார்த்தனர்.

உடனடியாக சத்தம்  போட்டதும் அக்கம்-பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் வந்தனர். சிறுத்தையின்  கால் அடிச்சுவடை தொடர்ந்து சென்றபோது, குழந்தையின் பாதி உடலை கண்டெடுத்தனர்.இது குறித்து உடனடியாக மாகடி போலீஸ் நிலையத்திற்கும்,  வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்  மற்றும் வன அதிகாரிகள், நள்ளிரவில் சிறுத்தை வீட்டிற்குள் வந்து குழந்தையை  தூக்கி சென்றதை உறுதி செய்தனர். தகவல் கிடைத்ததும் மாகடி தொகுதி எம்எல்ஏ  மஞ்சுநாத்தும் கிராமத்திற்கு வந்து குழந்தையை இழந்த பெற்றோருக்கு ஆறுதல்  கூறினார்.

குழந்தையை கொன்ற சிறுத்தை கிராமத்தில் உள்ள புதரில்  எங்கேயாவது பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதால் வன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். கிராமத்தினர் சிறுத்தைக்கு பயந்து  வீட்டில் முடங்கியுள்ளனர். இந்த சம்பவம் கதிரையனபாளையாவில் பரபரப்பு  ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை பிடிக்கும் வரை எங்களுக்கு நிம்மதி  இருக்காது என்று கிராமத்தினர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Tags : parents ,Karnataka ,home , Baby, leopard, Karnataka
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...