சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ஆசியாவின் மிகப்பெரிய அம்பத்தூர் தொழிற்பேட்டை, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உள்ளே வருவதால், அங்கே உள்ள நிறுவனங்கள் தொழிலை தொடங்க முடியவில்லை. இவர்கள் தான், பெருந்தொழில் நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை ஆக்கி தருகிறார்கள். அவர்கள் இயங்க முடியவில்லை என்றால், பெருந்தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு கொடுத்து இருக்கிற உதிரி பாகங்கள் கொள்முதல் வேறு நிறுவனங்களுக்கு மாற்றி வருகிறார்கள். மற்றவர்களும், மாற்றி விடக்கூடும். அதனால், அம்பத்தூர் தொழிற்பேட்டை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். எனவே, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்கள், திங்கட்கிழமை முதல் இயங்குவதற்கு தமிழக அரசு அறிவிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.