வாஷிங்டன்: அமெரிக்காவில் ஊரடங்கு காலத்தில் 200 சதவீதம் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்த இந்திய வம்சாளியை சேர்ந்த மளிகைக் கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. 13 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 78 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் 4ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் மளிகை கடை உரிமையாளர் பொருட்களின் விலையை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்துள்ளார்.
கலிபோர்னியாவின் ப்ளீசன்டன் பகுதியில் அப்னா பஜார் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருபவர் ராஜ்விந்தர் சிங். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட 10 சதவீத விலை உயர்வை காட்டிலும் 200 சதவீதம் வரை பொருட்களின் விலையை அதிகரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.வாடிக்கையாளர் ஒருவர் மஞ்சள் வெங்காயம், இஞ்சி, பீன்ஸ், நூடுல்ஸ், டீத்தூள், மாதுளம்பழம் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். கடை உரிமையாளர் கொடுத்த பில்லை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கடையில் பொருட்கள் வாங்கிய அவர், இது தொடர்பாக கடந்த வியாழனன்று அலமேடா கவுன்டி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் உரிமையாளரிடம் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் கொடுத்த பொருட்கள் வாங்கிய ரசீது மற்றும் விசாரணையில் கடை உரிமையாளர் விலையை 200 சதவீதம் அளவுக்கு உயர்த்தி விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதாக கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் சேவியர் பசீரா மற்றும் அலமேடா கவுன்டி மாவட்ட அட்டர்னி நான்சி ஓ மாலே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும் பல மடங்கு விலை உயர்வு மற்றும் பொது சுகாதார அவசர நிலை காலத்தில் சட்டத்தை மீறிய இதுபோன்ற சம்பவம் தீவிரமாக கருத்தில் கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகிற ஜூலை 9ம் தேதி ராஜ்விந்தர் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. பல மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்த குற்றத்துக்காக அவருக்கு ஒரு ஆண்டு மிகாமல் சிறை தண்டனை அல்லது ரூ.7.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.