ஈரோடு: கொரோனா பரவலை தடுக்க வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தபிறகு உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மாவட்டத்தில் செக்யூரிட்டி இல்லாமல் உள்ள 200 ஏ.டி.எம். மையங்கள் பூட்டப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் முழுவதும் 600 ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வந்தன.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஒவ்வொரு ஏ.டி.எம். மையங்களில் ஒரு நபரை அந்தந்த வங்கிகள் நியமிக்க வேண்டும். அவர், பணம் எடுக்கும் வருபவர்களுக்கு சானிடைசர் மூலம் கை கழுவியதை உறுதி செய்த பிறகுதான் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், செக்யூரிட்டி இல்லாமல் செயல்பட்டு வந்த 200 ஏ.டி.எம்.கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்று கூறினர்.