×

கோயம்பேடு சந்தை மூடல் எதிரொலி: சென்னையில் தொடர்ந்து 3 நாட்களாக காய்கறி விலை உயர்வு...முருங்கைக்காய் ரூ.15-க்கு விற்பனை

சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை மக்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக  கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதற்கு, கோயம்பேடு மார்க்கெட் தான் காரணம் என்று அனைவரும் குற்றச்சாட்டு கூறும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோயம்பேடு சந்தையில் சில வியாபாரிகள், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் அதிகாரிகள் திடீரென விழித்துக் கொண்டு, பழம் மற்றும் பூ    மார்க்கெட்டை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தொடங்கினர். பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா உற்பத்தி சந்தையாக மாறிய கோயம்பேடு மார்க்கெட்டை    மூடுவதாக தமிழக அரசு கடந்த 4-ம் தேதி அறிவித்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் சிலருக்கு தொற்று   இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்படுகிறது.

பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் வரும் 7ம் தேதி வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக காய்கறி    மொத்த விற்பனை அங்காடி செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் திருமழிசை காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு வந்து    காய்கறிகளை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், திருமழிசையில் சந்தை இன்று வரை தொடங்கவில்லை. கடைகள் அமைக்கும் பணிதான் தொடந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால், சென்னையில் காய்கறி விலை புயல் வேகத்தில்  உயர்ந்து வருகிறது.

1 கிலோ விலை நிலவரம்:

பெரிய வெங்காயம் ரூ.40, சின்ன வெங்காயம் ரூ.130 வரை விற்பனை; உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் ரூ.80, கோஸ் ரூ.50, பீன்ஸ் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெண்டைக்காய் ரூ.80, பூண்டு ரூ.240, கேரட் ரூ.160, இஞ்சி ரூ.120,  முருங்கைக்காய் ரூ.15 வரை கணிசமாக விலை உயர்ந்துள்ளது. கீரை கட்டு விலை மே 9 - 15 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு சந்தை செயல்படாததால், சென்னையில் மற்ற பகுதியில் இயங்கும் மார்கெட் பகுதியில் இருந்து காய்கறிகள் வந்து இறங்குகின்றன. காய்கறிகளின் வரத்து போதுமானதாக இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  அதனால் இந்த அளவிற்கு விலை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. திருமழிசை மார்கெட் செயல்பாடுகளுக்கு வந்த பிறகு காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Tags : closure ,Chennai ,Coimbatore , Echoing the closure of the Coimbatore market: Vegetable prices continue to rise in Chennai for 3 consecutive days ...
× RELATED சென்னை – கோவை இடையே நாளை மறுநாள் சிறப்பு ரயில்!!