புதுடெல்லி: சீனாவிடம் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய மனு ஒன்றை தாக்கல் ெசய்தார். அதில் கூறியிருப்பதாவது: சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக அளவில் பரவி இருந்தாலும், இந்தியாவில் ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவை எண்ணிப் பார்க்கும்போது இந்தியாவின் வருங்காலம் என்பது கேள்விக் குறியாக உள்ளது.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை சீன அரசு பறவை மூலமாகவும், விலங்குகள் மூலமாகவும் பரவியதாக காரணம் தெரிவித்தது. அது முற்றிலும் பொய்யான தகவல்.
இது அந்நாட்டின் உயிரி ஆயுதம் மூலமாகவே பரவியது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதுகுறித்து சர்வதேச நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீர்கேட்டை சமாளிக்க சீனாவிடமிருந்து 600 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த ஓரிரு தினங்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதாரம் சீர்குலைந்துள்ள நிலையில் இழப்பீடு கேட்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.