சென்னை: வரைவு மின்சார சட்டத்திருத்தம் அமலுக்கு வராதவண்ணம் தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.
மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி நேற்று வெளியிட்ட அறிக்ைக: மத்திய அரசு 17.4.2020 அறிவிப்பின் வாயிலாக 2020ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு, அனைத்து மாநிலம் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மின்சார சட்டத்திருத்தத்திலுள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முக்கிய சரத்துகளை நீக்க மத்திய அரசை வலியுறுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எடுத்த நடவடிக்கைக்கு பிரதமருக்கு முதல்வர் 23.12.2014 அன்று எழுதிய கடிதத்தில் அதனை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது, மத்திய அரசு 2020ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தம் மூலமாக, மேற்கூறிய முக்கிய சரத்துக்கள் மட்டுமல்லாது புதிய திருத்தமாக மின்சார விநியோகத்தை மேற்கொள்ள தனியார் துணை விநியோக உரிமதாரர் மற்றும் உரிமம் பெறுபவர் மூலமாக மேற்கொள்ளுதல் மற்றும் மாநில ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட மின்கொள்முதல், மின் விற்பனை செய்யும் மின் உற்பத்தியாளர்கள் மற்றும் உரிமதாரர்களுக்கு இடையேயான ஒப்பந்த சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றை மத்திய அரசினால் புதிதாக அமைக்கப்படவுள்ள மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்திற்கு மாற்றுதல் போன்ற சரத்துக்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைகளையும் அனுமதிக்காது. எனவே, தற்பொழுது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள 2020ம் ஆண்டு வரைவு மின்சார சட்டத்திருத்தத்தினை கைவிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எந்த சூழ்நிலையிலும் தமிழக மக்களுக்கு பாதகமான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது. தமிழக முதல்வர் மேற்கூறிய வரைவு மின்சார சட்டத்திருத்தம் அமலாக்கத்திற்கு வராதவண்ணம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.