சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று இரவு ஒரு வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசை எதிர்த்து ஆவேசமாக கூறியிருப்பதாவது: ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? தமிழ்நாட்டில், மதுக்கடைகளை திறந்துவிட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர், அம்மாவின் அரசா. இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டு சென்ற உயிர்களை விட அதிகமான உயிர்களை இந்த நோய்க்காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும்.
அப்படி எதுவும் நடந்தால், தமிழகத்தின் தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது? கிராமங்கள் எங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழா கூட்டம். கொள்ளை நோய் ஒரு பக்கம், அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம். தாங்குமா தமிழகம்? வெகுண்டெழு தமிழகமே. வேறு தலைமை தேடு. வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு இந்த கொள்ளையரையும் வெளியேற்றும் காலம் நெருங்கி விட்டது. அரசுக்கு ஒரு சிறு குறிப்பு, இன்றும் தாமதமாகி விடவில்லை. மனசாட்சி இருந்தால் அதை தொட்டு சொல்லுங்கள். இல்லையேல், மேலிடத்தில் கேட்டு சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.