×

கடந்த மார்ச் முதல் டிசம்பர் வரை இந்தியாவில் 10 மாத காலத்தில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும்: யுனிசெப் அமைப்பு தகவல்

நியூயார்க்: கொரோனாவை சர்வதேச நோய் பரவலாக அறிவித்த கடந்த மார்ச் மாதம் முதல் வரும் டிசம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. தாய்மார்கள் தினம் வரும் 10ம் தேதி கொண்டாடப்பட இருப்பதையொட்டி ஐநா குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) கொரோனா பாதிப்புள்ள மார்ச் 11 முதல் வரும் டிசம்பர் 16ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் அதிகபட்ச குழந்தைகள் பிறக்கும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு கூறியுள்ளதாவது: கொரோனாவை சர்வதேச பரவலாக அறிவித்துள்ள மார்ச்  முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் உலகம் முழுவதும் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியாவில் அதிகபட்ச குழந்தைகள் பிறக்கும்.

அதாவது மார்ச் 11 முதல் வரும் டிசம்பர் 16ம் தேதி வரையிலான இந்த காலத்தில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்கும். இதேபோல் சீனாவில் 1.35 கோடி குழந்தைகளும், நைஜிரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேஷியாவில் 40 லட்சம் குழந்தைகளும் பிறக்கும். கடந்த ஜனவரி முதல் வரும் டிசம்பர் வரையிலான காலத்தில் 2.41 கோடி குழந்தைகள் இந்தியாவில் பிறக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 இந்த காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் மற்றும் அவர்களை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு கிடைக்கும் மருத்துவ சேவை ஆபத்து நிறைந்ததாக இருக்கும். போதுமான அளவுக்கு உபகரணங்கள், நர்ஸ்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கும். கொரோனா தொற்றால் மிக செல்வவளமிக்க நாடான அமெரிக்காவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் மார்ச்- டிசம்பர் காலக்கட்டத்தில் 33 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : babies ,India ,UNICEF , India, Children, UNICEF Organization
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!