திருவனந்தபுரம்: அபுதாபி, துபாயில் இருந்து 379 மலையாளிகளுடன் நேற்று இரவு 2 விமானங்கள் கேரளா வந்தன. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, வளைகுடா உள்பட பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ளனர். கேரளாவை சேர்ந்த மலையாளிகள் மட்டும் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கேரள முதல்வர் பினராய் விஜயன் பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் எதிரொலியாக நேற்று கேரள பயணிகளை அழைத்து வர 2 விமானங்கள் அபுதாபி, துபாய்க்கு புறப்பட்டன. தொடர்ந்து நேற்று இரவு அபுதாபியில் இருந்து 179 பயணிகளுடன் ஒரு விமானம் கொச்சிக்கும், துபாயில் இருந்து 200 பயணிகளுடன் ஒரு விமானம் கோழிக்கோட்டுக்கும் வந்தன. பயணிகளை இறக்கி விட்ட பிறகு மீண்டும் அபுதாபி, துபாய்க்கு விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.
விமானத்தில் வந்த பயணிகள் அனைவருக்கும் விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பாஸ் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்: கேரளாவுக்கு தற்போது தமிழகம், கர்நாடகா உட்பட வெளி மாநிலங்களில் உள்ள மலையாளிகள் வந்துகொண்டுள்ளனர். இவ்வாறு வருபவர்கள் எல்லைகளில் பரிசோதனை செய்யப்பட்டு ேநாய் அறிகுறி இருந்தால் அரசு முகாம்களுக்கும் இல்லாதவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் வெளி மாநிலங்களின் சிவப்பு மண்டலத்தில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் அரசு முகாம்களில் இருக்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கேரளா செல்ல நேற்று பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை கேரளா வந்தவர்கள் அனைவரையும் பரிசோதித்தபின்னர் மட்டுமே மீண்டும் பாஸ் விநிேயாகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.