சென்னை: தென்னிந்திய கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சங்க தலைவர் உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் ஆண்டிற்கு சுமார் 500க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கொரானாவால் கடந்த 2 மாதங்களாக கண்காட்சிகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது.இதனால், இந்த தொழிலை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான அரங்கு உரிமையாளர்கள், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்து, வருமானமின்றி வாடுகின்றனர்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியான கண்காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெறும்.
ஒவ்வொரு கண்காட்சிக்கும் அரசு அனுமதி பெறுவதற்கு கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் பல ஆண்டுகளாக முதலமைச்சர் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் கண்காட்சிகள் நடத்துவது என்பது இந்த ஆண்டு இறுதிவரை இயலாத காரியம். இதனால், இந்த தொழிலை நம்பி வாழும் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி தொகையை அறிவிக்க வேண்டும். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலங்களில் ஏற்கனவே அரசின் அனுமதி பெற்று கண்காட்சியை நடத்த முடியாமல் போன கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கண்காட்சி பாதியில் நிறுத்தப்பட்ட கண்காட்சி ஒருங்கிணைந்த ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அதற்கான நஷ்டஈடு தருமாறு தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.