×

கோட்டையில் அமர்ந்து கமிஷன் கணக்கு பார்ப்பவர்களுக்கு மக்களின் பட்டினி தெரியுமா? நிதி ஆதாரம் குறித்த வெள்ளை அறிக்கை

* வெளியிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: கோட்டையில் அமர்ந்து கொண்டு இன்னமும் கமிஷன்களை கணக்குப் பார்ப்பவர்களுக்கு மக்களின் பட்டினி எப்படி தெரியும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:  கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வமும் கொண்ட அதிமுக அரசைக் கண்டித்து கருப்புச் சின்னம் அணியும் போராட்டத்தை நடத்துவது எனத் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுத்தோம். இதில் தமிழக மக்களும், பெரும் எண்ணிக்கையிலான  மகளிரும், கருப்புச் சின்னம் அணிந்து, ‘’கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அதிமுக அரசைக் கண்டிக்கிறோம்’’ என்று எழுப்பிய முழக்கங்களின் பேரொலி,  கோட்டையில் உட்கார்ந்திருக்கும் முதல்வரின் காதுகளில் நிச்சயம் எதிரொலித்து பதற்றத்தை அதிகப் படுத்தியிருக்கும்.

 மக்களைக் கூட்டமாகக் கூடாதீர்கள் என்று சட்டம் போட்டுவிட்டு, அந்த சட்டத்தை மீறுவதற்கு ஓட்டை போட்டுத் தருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு. மதுக்கடைகளை திறப்பது, சமூகத்  தொற்றை ஏற்படுத்திப் பரப்பும்  எனத் தெரிந்தும், அரசு இதைச் செய்வது, அரசின் மக்கள் நலனை மறந்த, பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது. ஊரடங்கு காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் பசியுடனும் பட்டினியுடனும் முடங்கி உள்ளனர். ஆனால், “தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி தருகிறார்.

 அவருக்கு சவாலாகவே சொல்கிறேன். “பசித்திருப்பவர்கள் தகவல் தாருங்கள்” என்று ஒரு பொதுத் தொலைபேசி எண்ணை தமிழக அரசின் சார்பில் தைரியம் இருந்தால் அறிவியுங்கள். உங்களுக்கு எத்தனை லட்சம் பேர் தகவல் தருகிறார்கள் என்று பாருங்கள்.

கோட்டையில் உட்கார்ந்து கொண்டு, இன்னமும் டெண்டர் தேதிகளையும், காண்ட்ராக்ட் கமிஷன்களையும் கணக்குப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கு  மக்களின் பசி, பட்டினிப் பற்றி என்ன தெரியும்?   ரேசன் கார்டுக்கு ரூ.5000 வழங்கி அவர்களை அரசு பாதுகாக்க வேண்டும். மாநில அரசின் 2 லட்சம் கோடி ரூபாய் நிதிநிலை அறிக்கையில் இதற்காக ரூ.3,850 கோடி மட்டுமே செலவாகும். எதைக் கேட்டாலும் தமிழக அரசின் நிதி நிலைமையைக் காரணம் காட்டுகிறார்கள். மாநில நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய நிதிகள் பற்றிய விபரங்களும் அதில் குறிப்பிடப்பட வேண்டும். அதுதான் தொழிற்துறையினர், இந்த இக்கட்டான நேரத்தில் தங்களது எதிர்கால தேவையை திட்டமிட உதவுவதாக இருக்கும்.

 பொருளாதாரத்தை மீட்க வழியில்லாத இந்த அரசுக்கு தெரிந்த ஒரே வழியாக மதுபானக் கடைகள் மட்டுமே இருப்பது அவமானமாகும். இவை அனைத்தையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கும் வகையில்  கருப்புச் சின்னம் அணிதல், கருப்புக் கொடி பிடித்தல் ஆகிய வடிவங்களில் கண்டனப் போராட்டம் நடத்தி உள்ளோம். இந்தப் போராட்டம் தமிழக அரசின் மூடிய விழிகளை நிச்சயம் திறக்கும் என நம்புகிறோம்.    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக மக்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்
தமிழக மக்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசிய பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
 திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட திமுக பகுதிச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் நகரச் செயலாளர்களிடம் காணொலி மூலமாக விசாரித்தறிந்து ஆலோசனைகள் வழங்கினார்.  

பின்னர் மாலையில், ‘’ஒன்றிணைவோம் வா’’ செயல்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெற்ற பொதுமக்களுள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அப்போது, அவர்களின் நலன் விசாரித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்குக் கிடைத்த உதவிகள் குறித்து விசாரித்தறிந்து, “தமிழக மக்களுக்கு திமுக எப்போதும் துணை நிற்கும்” என உறுதியளித்தார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஷவாயு கசிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில், ‘விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு குறித்து அறிந்து அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொடுந்துயரைக் கையாள்வதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியான நேரத்தில் உதவுவதிலும் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், அவரது அரசுக்கும் என்னுடைய ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.


Tags : Source ,fort ,commission ,fortune accounting commission , The DMK leader, DMK leader Stalin, Fund Source, White Paper
× RELATED கோடை மழையால் பசுமையான பருத்தி செடிகள்