சென்னை: ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் குறித்த விமர்ச்சனம் செய்த கமல்ஹாசனுக்கு, ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஸ்ரீ தியாக ப்ரம்ம மஹோத்சவ சபா நிர்வாக குழு தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வால்மீகி முனிவரின் மறுபிறவி என்று போற்றப்படும் ஸ்ரீ தியாக பிரம்மத்தை, கமல்ஹாசன் திடீரென உதாரணமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. உஞ்சவிருத்தி என்பது பிச்சையல்ல. அது ஒரு பாகவத தர்ம பக்தி என்பது கமல்ஹாசனுக்கு தெரிய நியாயமில்லை. ஒரு தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளை, ஒரு பேட்டியின் நடுவே போகிற போக்கில் பிச்சை எடுத்தார் என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.
சத்குரு சுவாமிகள் ஒன்றும் பொருள் சேர்க்க முடியாதவர் அல்ல. மிக அதிகமான சீடர்களை கொண்டவர். கலையை கற்றுக் கொடுக்க எந்தவிதமான குருதட்சணையும் பெற்றுக் கொள்ளாமல் அவர்களுக்கு இசைக்கலையை கற்றுக் கொடுத்தவர். தஞ்சை மன்னர் சரபோஜி பொன்னும், பொருளும் கொடுத்து அவரது அரசவைக்கு அழைத்த போதும் மறுத்து ராமநாமம் பாடுவது மட்டுமே தனது யாகம் என வாழ்ந்தவர். அவரது கீர்த்தனையிலே பணம் தனக்கு சுகம் தராது என்பதை வெகு விளக்கமாக அன்றே கூறிவிட்டார். எனவே, ஸ்ரீ தியாக ப்ரம்ம மஹோத்சவ மற்றும் இசைக்கலைஞர்கள் சார்பிலும் கமல்ஹாசனுக்கு இதை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம். அவர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.