×

அரிசி ஆலையிலிருந்து கொட்டப்பட்ட நெருப்பு உமியால் பெண்ணின் கால்கள் இரண்டும் வெந்தது: ராஜபாளையம் அருகே பரபரப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே அம்மையப்பபுரத்தை சுற்றி உள்ள அரிசி ஆலைகளில் இருந்து கழிவாக வெளியேறிய நெருப்புடன் கூடிய சாம்பலை மிதித்த பெண்ணின் இரண்டு கால்களும் வெந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை அடுத்து உள்ளது அம்மையப்பபுரம். இந்த கிராமத்தை சுற்றி சுமார் 15க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் நெல்லை அவிப்பதற்காக விறகுக்கு பதிலாக, உமியை பயன்படுத்துவதாக கிராமமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த முறையில் நெல்லை அவிக்கும் போது, உமியில் இருந்து பறந்து வரும் தூசு சாலையில் செல்வோர் கண்ணில் அடிக்கடி விழுந்து சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, சாலையோரம் உள்ள ஆலைகளில் உமியை எரிப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அத்துடன் இந்த ஆலைகளில் எரித்த பின் வெளியேறும் உமி சாம்பலை சூடு தணியும் முன்பு அம்மையப்பபுரம் அருகே உள்ள இளந்திரை கொண்டான் கண்மாயில் கொட்டி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இப்படி கொட்டப்பட்ட உமிகழிவை மிதித்த சிறுமி காயங்களுடன் உயிர் தப்பி உள்ளார். சில நேரங்களில் ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளும் இந்த நெருப்பு உமியில் காயம் அடைந்துள்ளது. எனவே, கண்மாயில் உமி சாம்பலை கொட்ட வேண்டாம் என கிராம மக்கள் அரிசி ஆலை நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்மாய் உள்ள பாதையில் நெருப்புடன் கூடிய சாம்பல் கொட்டப்பட்டுள்ளது. அப்போது விவசாய வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த காமக்கா(40) என்ற பெண் தவறுதலாக சாம்பலை மிதித்ததாக தெரிகிறது. இதனால் அவரின் இரண்டு கால்கள் இரண்டும் வெந்தது.

இதனால் அவரின் அலறல் சத்தம் கேட்ட சுற்றி இருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பல முறை கோரிக்கை விடுத்தும் அலட்சியம் செய்யும் அரிசி ஆலை உரிமையாளர்கள் மீது ஆத்திரம் அடைந்த கிராம மக்கள்,நேற்று நேரில் சென்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இனி சாம்பல் வாகனம் கண்மாய்க்குள் சென்றால், சிறை பிடித்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : rice plant ,Rajapalayam ,Parasitic , Woman , husk , plant,Parasitic ,Rajapalayam
× RELATED ராஜபாளையம் ஏகேடி தர்மராஜா மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா