சென்னை: சென்னையில் இன்று முதல் அனைத்து தனிக்கடைகளும் இயங்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மே 17 வரை தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தனி கடைகள் இயங்க அனுமதி வழங்கியது. நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் இயங்கலாம். ஆனால், ஏசி பொருத்தப்பட்ட நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், ஆகியவை இயங்க அனுமதியில்லை என தெரிவித்திருந்தது. இதனால் ஏசி வசதி இல்லாத கடைகள் மட்டுமே இயங்க முடியும்.
இந்த நிலையில் இன்று முதல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனிக்கடைகளை இயங்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அதில், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி இல்லை. ஏசி இல்லாத தனிக்கடைகள் இயங்கலாம். ஆனால் ஏசி இயக்கப்படவில்லை என்ற அறிவிப்பை கடைகளுக்கு வெளியே பெரிய எழுத்துக்களில் எழுதி ஒட்டியிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.