×

திருமங்கலம் அருகே கோடையில் வீணாகும் வைகை குடிநீர்: பொதுமக்கள் வேதனை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே வைகை கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருவது பொதுமக்களிடம் வேதனையை உண்டாக்கியுள்ளது.திருமங்கலம் நகர்,  யூனியன் பகுதிகளுக்கு காவிரி, வைகை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி பகுதிக்கு வைகை கூட்டுக்குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக சோழவந்தானிலிருந்து கருமாத்தூர், அழகுசிறை, காண்டை வழியாக பைப்லயன் அமைக்கப்பட்டு சாத்தங்குடிக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காண்டை விலக்கு - சாத்தங்குடி இடையே உசிலம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள வைகை கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கடந்த சில தினங்களாக வீணாகி வருகிறது.

தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலால் திருமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் பிரச்னை எழுந்துள்ளன. இந்நிலையில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாகி வருவது சாத்தங்குடி மக்களிடம் வேதனையை உண்டாக்கியுள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Thirumangalam , Wasting, water ,summer ,Thirumangalam, Publi,
× RELATED ஊதுபத்தியால் வந்தது வினை வீட்டில் தீப்பற்றி பணம் பொருட்கள் எரிந்து நாசம்