×

மும்பையில் உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் வாடிப்பட்டி மக்கள்: மீட்க கோரிக்கை

வாடிப்பட்டி: கொரோனா தடுப்பு ஊரடங்கால் மும்பையில் உணவுக்கு கூட வழியின்றி தவிக்கும் வாடிப்பட்டி மக்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்டது கச்சைகட்டி கிராமம். இவ்வூரை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், மகாராஷ்டிரா மாநிலம்க மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் தங்கி இட்லி கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த கச்சைகட்டி கிராமமக்கள் தங்களது வாழ்வாதாராத்தை இழந்து தவித்து வருகின்றனர். மேலும் கடந்த 30 நாட்களில் கையில் இருந்த இருப்பு பணம் அனைத்தும் காலியான நிலையில் தற்போது உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கண்ணீர் மல்க தங்களது கோரிக்கைகள் அடங்கிய வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்களது உறவினர்கள் மும்பையில் சிக்கி தவிக்கும் கச்சைக்கட்டி கிராமமக்களை மீட்டு கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Wadipatti ,Mumbai , Wadipatti ,stranded ,Mumbai
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 526 புள்ளிகள் உயர்வு..!!