சென்னை : மே 7ம் தேதி அழிவின் ஆரம்பம் என சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டாக் ஒன்று வைரலாகி வருகிறது.கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதியுடன் முடிவடைய இருந்த ஊரடங்கு உத்தரவை, மே 17ம் தேதி வரை மீண்டும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் பல்வேறு தகவல்களின் அடிப்படையில், தனிக் கடைகள் இயங்கும் என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், முடி வெட்டும் கடை, அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பிற தனிக் கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில்,டாஸ்மாக் கடைகள் திறக்கப் படுமா? என்ற அச்சம் தமிழக குடும்ப பெண்களிடமும் சமூக ஆர்வலர்களிடம் தொடர்ந்து நிலவி வந்தது. இவ்வாறான சூழலில் வருகின்ற மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
அதன்படி,ட்விட்டரில் டாஸ்மாக் என்ற ஹாஷ்டேக்-ம் மே 7ம் தேதி முதல் அழிவு ஆரம்பம் என்ற ஹேஸ்டேக்-ம் வைரலாகி வருகிறது. இந்த காலத்தில் டாஸ்மாக் கடை திறப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், ஏற்கனவே கோயம்பேட்டில் பரவி வரும் வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க அங்கு கூட்டம் கூடி கொரோனா பாதிப்பு ஏற்படுத்துவதுடன் பல குடும்பங்களை இந்த ஊரடங்கு காலத்தில் மேலும் வறுமைக்கு தள்ளி இக்கட்டான சூழல் ஏற்பட காரணமாகிவிடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.