×

ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தால் வீடு தேடி வரும் மது பாட்டில்கள்.. குடிமகன்கள் கூடுவதை தவிர்க்க பஞ்சாப், சத்தீஸ்கர் அரசுகள் புதிய முயற்சி

சண்டிகர் : மதுபானங்களை வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்ய பஞ்சாப், சத்தீஸ்கர் அரசுகள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே.17ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சத்தீஷ்கர் மாநில அரசு தங்கள் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் ஊரடங்கை தளர்வு செய்துள்ளது. அதன்படி மதுக்கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் கடைகள் முன்பு மதுபிரியர்கள் குவிந்ததால் கொரோனா பரவலை தடுக்கும் சமுக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

இதனை அறிந்த சத்தீஸ்கர் அரசு  குடி மகன்களின் வசதிக்காக  புதிய முறையை அமல்படுத்தியது. இதற்காக சத்தீஷ்கர் மாநில அரசு வாணிப கழகம் ஆன்லைன் வெப் போர்டல் எனப்படும் வலைதளத்தை துவக்கியுள்ளது. இந்த வலைதளத்தில் தங்களது ஆதார் எண்ணை வைத்து பதிவு செய்தால் வரும் OTP  ஒருமுறை கடவுச்சொல்  மூலம் இணையதளத்திற்குள் சென்று தேவையான மதுபானங்களை ஆர்டர் செய்தால் உடன் வீட்டிற்கே நேரில் சென்று விநியோகிக்கும் முறையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு விநியோகிப்பதற்கு சேவை கட்டணமாக ரூ. 120 வசூலிக்கப்படும் என்றும் ஒரு நேரத்தில் 5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இதே போல் பஞ்சாப் மாநில அரசு வீட்டுக்கே சென்று மதுபானம் கொடுக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமூகப் பரவலை தடுக்க, தனி மனித இடைவெளியை மேற்கொள்ள உதவும் என்று அந்த மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags : Chhattisgarh ,Punjab ,governments , Online, Booking, Home, Wine Bottles, Citizens, Punjab, Chhattisgarh, Governments, try
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...