×

பணி முடிந்த பின், சாலையோரத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் உத்தராகண்ட் காவலர் : குவியும் பாராட்டுக்கள்!!

டெஹ்ராடூன் : இணைய வசதி இல்லாத ஏழைக் குழந்தைகள் இருவருக்காக சாலையோரத்தில் தற்காலிகமாகப் பள்ளி அமைத்து, பாடம் சொல்லிக் கொடுக்கும் உத்தராகண்ட் காவலர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறார்.தற்போதைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும்  கல்வியாண்டின் பாடத்திட்டங்கள் பாதிக்கப்படும் நிலையில் உள்ளன. ஒரு சில நிறுவனங்களும், அரசு பள்ளிகளும் இணையத்தளம் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வந்தாலும், ஸ்மார்ட் போன் வசதியே இல்லாத சூழலில் வாழ்க்கை நடத்துகின்றனர் ஒரு சில ஏழை, எளிய மக்கள்.

இம்மாதிரி தங்களின் கல்வியை பெற இயலாத ஏழைக் குடும்பத்தை சார்ந்த அக்கா, தம்பிக்கு சாலையோரத்தில் தற்காலிகமாகப் பள்ளி அமைத்து பாடம் எடுத்து வருகிறார் காவலர் ஒருவர்.உத்தராகண்டில் காவலராக பணிபுரியும் இவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் 12 மணி நேர பணி முடித்த பின், சாலை ஓரத்தில் இரு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் தனது பதிவில், இந்தப் பெருந்தொற்று காலத்தில் காவல்துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. உத்தராகண்ட் அருகே ருத்ராபூரின் சாலையோரத்தில் அக்கா, தங்கை இருவருக்கும் காவலர் ஒருவர் பாடம் கற்பித்து வருகிறார்.12 மணி நேரம் பணிசெய்த பிறகும் சாலையோரத்தில் அமர்ந்து கற்பிப்பது எத்தனை உத்வேகம் அளிப்பதாக உள்ளது?, அந்தக் காவலருக்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Tags : children ,Uttarakhand Guard , Work, Road, Poor Children, Lesson, Uttarakhand, Guard, Accumulation, Appreciation
× RELATED உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக...