×

பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டிய வழக்கு: காமக்கொடூரன் காசிக்கு 3 நாள் போலீஸ் காவல்: நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு

நாகர்கோவில் : பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளம்பெண்களிடம் பழகி, உல்லாசமாக இருந்து அதை வீடியோ எடுத்ததுடன், அதை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த தங்கபாண்டியன் மகன் காசியை (26) போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவிகள் உள்பட பலரை சீரழித்த காமக் கொடூரன் காசியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவனை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நாகர்கோவில் கூடுதல் மகளிர் விரைவு குற்றவியல் நீதிமன்றத்தில் 7 நாட்கள் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனு நேற்று நீதிபதி ஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யாசின் முபாரக் அலி, இது மிக முக்கியமான வழக்காகும். எனவே 7 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றார். மனுவை விசாரித்த நீதிபதி, 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த அனுமதி அளித்தார். வருகிற 7ம் தேதி மாலை மீண்டும் காசியை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து கோட்டார் போலீசார், காசியை காவலில் எடுத்து சென்றனர். காசியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப் டாப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது.

காதல் சின்னத்தை காட்டி போட்டோவுக்கு போஸ்
கொரோனா பிரச்னை காரணமாக முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரணை நடத்தப்படுவதால், நீதிமன்றம் வெறிச்சோடிய நிலையில் இருந்தது. காசி மற்றும் அவரை அழைத்து வந்த போலீசார் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். ஊடகத்தினர் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதை கவனித்த காசி, எந்தவித சஞ்சலமும் இல்லாமல் தனது கையால் காதலை வெளிப்படுத்தும் வகையில் ஹார்ட்டின் சின்னம் போல் காட்டி, சிரித்தவாறு போஸ் கொடுத்தார். நீதிமன்றத்துக்குள் செல்லும் போதும் சரி, வெளியே வரும் போது சரி சிரித்தபடியே இருந்தார்.

Tags : Kamakoduran Kasi ,Nagercoil Women ,Nagercoil , Women porn movie, case, kamakoduran kasi, police custody, Nagercoil, court
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...