கோதுமை மாவில் 15 ஆயிரம் பணம் வைத்து உதவி செய்தது நான் அல்ல என்று மறுத்துள்ளார் நடிகர் ஆமிர் கான். மும்பையில் சில தினங்களுக்கு முன் வாகனம் ஒன்று குடிசை பகுதிக்கு வந்தது. அதில் இருந்த தலா ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகள் அந்த பகுதியில் வைக்கப்பட்டு வாகனம் சென்றுவிட்டது. நள்ளிரவு நேரம் அது. தகவல் கேவிப்பட்டு தேவையுள்ளவர்கள் வந்து அதை எடுத்து சென்றனர். வீட்டில் சென்று அவர்கள் பிரித்து பார்த்தபோது அந்த மாவுக்குள் ₹15 ஆயிரம் பணம் இருந்தது. இதே போல் அத்தனை மாவு பாக்கெட்டிலும் பணம் இருந்தது. அதை பெற்ற மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுபோல் மறைமுகமாக உதவி செய்தது நடிகர் ஆமிர் கான் என்று தகவல் பரவியது. இது பற்றி ட்விட்டரில் ஆமிர் கான் கூறும்போது, ‘நண்பர்களே, கோதுமை மாவில் பணம் வைத்தது நான் அல்ல. இது பொய்யான தகவலாக இருக்கலாம். அல்லது உதவி செய்த ராபின் ஹூட், தன்னை அடையாளப்படுத்த விரும்பாமல் இருக்கலாம்’ என்றார்.