×

திரு.வி.க. நகர் மண்டலத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

சென்னை: திரு.வி.க. நகர் மண்டலத்தில்  கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட இருவர் நேற்று உயிரிழந்தனர்.  சென்னையில் கொரோனா  தொற்றால்  பாதிக்கப்பட்டவர்களில் 6வது மண்டலமான திருவிக நகர் முதல் இடத்தில் உள்ளது. இந்த மண்டலத்தில் நேற்று முன்தினம் வரை 324 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  இந்நிலையில் நேற்று ஒரே நாளில் திருவிக நகர் மண்டலத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். வியாசர்பாடி மாணிக்க விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த  82 வயது முதியவருக்கு கடந்த 27ம் தேதி காய்ச்சல் இருந்ததால் கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இவருடன் இருந்த இவரது மனைவி மற்றும் மருத்துவரான 27 வயது பேத்தி  ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டு தற்போது அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று  காலை சிகிச்சை பலனின்றி 82 வயது முதியவர் உயிரிழந்தார். அவரது உடல் வியாசர்பாடி மயானத்தில் அதிகாரிகள் முன்னிலையில் எரியூட்டப்பட்டது.  மற்றொருவர் உயிரிழப்பு: புளியந்தோப்பு கேபி பார்க்  18வது பிளாக்கை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணுக்கு  கடந்த சில வருடங்களாக ரத்தக்கொதிப்பு மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டது. எனவே, இவரது மகன் சரத்குமார், இவரை உடனடியாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இவர்களது பகுதியில் கொரோனா பாதித்தவர்களின்  எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இறந்தவருக்கு   கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இவருக்கு  கொரோனா தொற்று இருப்பது நேற்று  உறுதிப்படுத்தப்பட்டது.  இதையடுத்து, இவரது உடல் மூலக்கொத்தளம் மயானத்தில் நேற்று மாலை  அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Coroner ,Thiru.vi.ka Corona ,region , Thiru.vi.ka Nagar, Corona, 2 killed
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!