போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் சாராயம் காய்ச்சுவதற்காக, வேலாமர பட்டைகளை குடிமகன்கள் உறித்து எடுத்து செல்வதால், மரங்கள் பட்டைகள் உறிந்து மொட்டையாக காட்சியளிக்கிறது.ஊரடங்கு உத்தரவால், கடந்த மார்ச் 24ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளது. மேலும், ஹைடெக்காக வீட்டிலேயே சாராயம் காய்ச்சுவது எப்படி என்ற வீடியோக்கள் யூ டியூப்பில் வெளியாகி வருகிறது. அந்த வீடியோக்களை பார்க்கும் நபர்கள், வீட்டிலேயே பழங்களை கொதிக்க வைத்து குக்கர் மூலம் சாராயம் காய்ச்சி குடித்து வருகின்றனர். ஊரடங்கால் பழைய முறைபடி சாராயம் காய்ச்சுவதற்காக குண்டு வெல்லம், வேலாம்பட்டை, பழங்கள் உள்ளிட்ட போதை ஏற்றும் பொருட்களை சேர்த்து சாராயம் காய்ச்ச துவங்கி உள்ளனர்.
இதற்காக அவர்கள் அருகில் ஏரிகளில் உள்ள வேலாமரத்தில் உள்ள பட்டைகளை உறித்து எடுத்து செல்கின்றனர். இதனால் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் உள்ள வேலாம் மரங்கள் தோல் உறித்து காணப்படுகிறது. சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படும் முக்கிய மூலப்பொருளான குண்டு வெல்லம் கடந்த மாதங்களில் கிலோ 50க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கள்ளச்சாரயம் காய்ச்சுவதற்கு அதிகளவில் பயன்படுத்துவதால் குண்டு வெல்லம் விலை உயர்ந்து, கிலோ 80க்கு விற்பனை செய்யப்படுகிறது.