நெல்லை: நெல்லையில் கடல் மீன்கள் வரத்து குறைந்ததால் குளத்து மீன்களுககு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறு, குளங்களில் தூண்டில் போட்டு மீன்களை பிடித்து வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதிவரை அமலில் உள்ளது. இதன்காரணமாக ஆட்டோ, வாடகை கார் ஓட்டுதல், கட்டிட தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தொழில்முனைவோர், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்றனர். இதேபோல் கடலில் விசைபடகுகள் மூலம் மீன்பிடி தொழிலும் நடைபெறவில்லை. நாட்டு படகுகள் மூலம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இதன்காரணமாக கடல் மீன்கள் வரத்து குறைந்துள்ளது. கடல்மீன்கள் சிலா மீன் கிலோ ரூ.1600, பிற வகை மீன்கள் கிலோ ரூ. 400 முதல் ரூ. 600 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் குளங்களில் வளர்ககப்படும் மீன்கள் தற்போது பிடிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் கெண்டை, கட்லா, விரல், தேளி, எருமை செத்தை உள்ளிட்ட மீன்கள் கிலோ ரூ. 250 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகின்றன. அயிரை மீன்கள் தற்போது கிலோ ரூ. 860 வீதம் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் தற்போது ஊரடங்கு உத்தரவால் தொழில்கள் இன்றி வாழ்வாதாரம் பாதிககப்பட்ட தொழிலாளர்கள் மீன் தூண்டில்கள் தயார்படுத்தி ஆறு, குளங்களில் மீன்களை பிடித்து தெருக்களில் விற்று வருமானத்தை ஈட்டி வருகின்றனர். தூண்டில் மூலம் ஆறு, குளங்களில் மீன்பிடிப்பவர்கள் தினமும் ரூ.300க்கும் குறையாமல் வருமானம் ஈட்டி வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கொள்வதாக தெரிவிக்கின்றனர். இதேபோல் தூண்டில் மூலம் மீன்பிடிப்பவர்களிடம் விலையும் குறைவாக உள்ளதாகவும், கெண்டை, கெளுத்தி, ஆரா உள்ளிட்ட பலதரப்பட்ட ஆற்று மீன்கள் கிடைப்பதாக பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.