×

கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம்: பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி

தேன்கனிக்கோட்டை:  தளி அருகே, தோட்டத்திற்கு சென்ற விவசாயியை, கரடி தாக்கியதில் படுகாயமடைந்தார். அவருக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அருகே தமிழக-கர்நாடக மாநில வனப்பகுதியை ஒட்டியுள்ள பேளகரை கிராமத்தை சேர்ந்த விவசாயி முனியப்பா மகன் சிக்கண்ணா(38). இவர் நேற்று காலை, தனது பீன்ஸ் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, பேளகரை வனப்பகுதியிலிருந்து வந்த கரடி, அவர் மீது பாய்ந்து பலமாக தாக்கியது. இதில் அவரது நெற்றி, இடது கை, வலது தொடை ஆகிய பகுதியில் பலத்த காயமேற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து, படுகாயமடைந்த அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர், மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அங்கிருந்து பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கரடி நடமாட்டத்தை கண்காணித்து வரும் தளி வனத்துறையினர், கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Farmer Injured In Bear Attack ,Bangalore Hospital , hitting ,bear, Farmer, Bangalore, Hospital
× RELATED கேப்டன் வருண் சிங் பெங்களூரு...